திருத்தணி, ஜூலை 19 - திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களும் கோவில் நடைசாத்தப்படாமல் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து இருக்கும். பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்ன தானம் வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் 60 இடங்களில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக 452 தூய்மை பணியாளர்கள் எப்போ தும் பணியில் ஈடுபடுவார்கள். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். கோவில் உள்ளேயும் 15 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக 127 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவில் துணை ஆணையர் விஜயா உடன் இருந்தனர்.