சென்னை, ஏப். 12 - அண்ணாசாலையில் உள்ள சுமார் 12 கிரவுண்ட் திறந்தவெளி நிலத்தை மாநகராட்சி பயன்படுத்தாமல் வைத்துள்ளது. அதனை பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, கிரீம்ஸ் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைபேசி அலுவலகம், பிஎஸ்என்எல் இணைப்பகம், வருமான வரித்துறை அலுவலகம், ஜிஎஸ்டி அலுவலகம், கெயில் நிறுவனம், பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர், வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள், அண்ணா சாலையில் இறங்கி சுமார் 1.50 கி.மீ. நடந்து அலுவலகம் வருகின்றனர். இதனால் நெரிசல் மிகுந்த அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலையில் நடந்து வர முடியாமல் சிரமப்படுகின்றனர். மனி தர்களின் நடமாட்டம் அதிகமாகும்போது, நெரிசலும் அதிகமாகிறது. இதனை தவிர்க்க பிஎஸ்என்எல் வளாகத்தின் பின்புறம் உள்ள வழியை திறந்து விட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “பிஎஸ்என்எல் வளாகத்தின் பின்புறம் சுமார் 12 கிரவுண்ட் திறந்தவெளி நிலம் உள்ளது. அதற்கடுத்துள்ள பொதுச்சாலை வழியாக சுமார் 150 மீட்டரை கடந்தால் அண்ணாசாலையை மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிறுத்தத்தை அடைய முடியும். இந்த திறந்தவெளி நிலத்தை பல ஆண்டுகளாக மாநகராட்சி பயன்டுத்தாமல் உள்ளது. இதனால், பொதுச்சாலையை ஆக்கிரமித்து சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, திறந்தவெளி நிலத்தில் பூங்கா அமைத்து கொடுத்தால், ஊழியர்கள், பொதுமக்களின் கால விரையம், அசவுகரியம் தவிர்க்க முடியும். மாநகராட்சி முயற்சித்தால், பிஎஸ்என்எல் வளாகத்தில் உள்ள நிறு வனங்களே பூங்காவை அமைத்து, பராமரிக்க வைக்க முடியும். இதனால் ஊழியர்களின் பணித்திறனும் அதிகரிக்கும். அண்ணாசாலையில் இயற்கை சூழல் மிகுந்த ஒரு பூங்காவும் உருவாகும்” என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?