districts

அனுமதியின்றி இயக்கப்பட்ட கல்குவாரி லாரிகள் சிறைபிடிப்பு

வேலூர், பிப். 25- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் கரடிகுடி ஊராட்சிக்குட்பட்ட தாங்கல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மலைகளில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து கட்டிட பணிகளுக்காக வேலூர், குடியாத்தம், ஒடுகத்தூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா போன்ற பகுதிகளுக்கு ஜல்லிக் கற்கள், பாறைகள், கருங்கற்களை டிப்பர் லாரி மூலம் 24 மணி நேரமும் ஏற்றிச் செல்கின்றனர். இதில் சில லாரிகள் உரிய அனுமதியின்றி இயக்கி வருகின்றனர். இதனால் சுற்றியுள்ள பள்ளிகள், வீடுகள் முழுவதும் தூசி படிவதோடு, குவாரியில் வைக்கப்படும் வெடியால் பூமி அதிர்ந்து வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் காற்று மாசடைகிறது. அதேபோல் அதிவேகமாக இயக்கப்படும் டிப்பர் லாரிகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை இந்நிலையில், கல்குவாரியில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவருடன் சேர்ந்து பொதுமக்கள் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து குவாரியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சிவமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். கல்குவாரிகளில் அனுமதியின்றி இயங்கி வரும் இன்னும் பல டிப்பர் லாரிகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.