திருவில்லிபுத்தூர், அக்.13- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் கூமாபட்டி அருகே ராமசாமியாபுரத்தில் வெள்ளியன்று டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்தது. இதுகுறித்து அறிந்த ராமசாமிபுரம் பொதுமக்கள் கடையை திறக்கக் கூடாது என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் முத்துமாரி, வருவாய்த்துறை, திருவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக மறியல் கைவிடப்பட்டது. இதே பகுதியில் கடந்த இரண்டு முறை புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் மக்களுடைய போராட்டத்தால் முயற்சியை கைவிட்டு சென்றது. நிர்வாகம் தற்போது மூன்றாவது முறையாக கடை திறக்க முயற்சி செய்தது மக்கள் போராட்டம் வென்றது.