சென்னை,ஜூன் 13- தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறை அத்துமீறி சோதனை நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டின் தலைமச் செயலகத்திற்குள், சி.ஆர்.பி.எப் வீரர்கள் குவிக்கப்பட்டு வருமான அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். எதிர்க்கட்சிகளை பணியவைப்பதற்காக, ஒன்றிய அரசு முகமைகளை பயன்படுத்தும் பாஜகவின் அவக்கேடான அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டை கொஞ்சமும் மதிக்காமல், மாநிலத்தின் தலைமைச் செயலகத்திற்குள் ஒன்றிய அரசு அத்து மீறுவது முதல்முறை அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அவமதிக்கும் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.