புதுச்சேரி, மார்ச் 1- தையல் கலைஞர்களுக்கான சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி தையல் இயந்திரத்துடன் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் தையல் கலைஞர்களை அலைக்கழிக்காமல் உறுப்பினராக்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் தையல் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும், பள்ளி சீருடைகள் மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆடைகளை தயாரிக்கும் பணிகளை தையல் கலைஞர்களுக்கு வழங்க வேண்டும், மரணமடைந்த தையல் கலை ஞர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இறப்புகால நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மணிபாலன், அப்துல்பஷீர், அரிதாஸ், சூரியன், சங்கரன், மணவாளன், ரேகா ஆகியோர் பேசினர்.