புதுச்சேரி, ஜுன் 28- குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் திருநள்ளாறு காவல் நிலை யத்தின் அடாவடியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பிரதேசமான காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல், குற்ற வாளிகளை பாதுகாக்கும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர். செந்தில்குமரன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் காரைக்கால் மாவட்ட செயலாளர் எஸ்.எம். தமீம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் வின்சென்ட், துரைசாமி,காரைக்கால் வட்டக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ராஜேந்திரன், பால்ராஜ், பழனிவேல், பிரகாஷ்,மூத்த உறுப்பினர்கள் என்.எம்.கலியபெருமாள், வே.கு.நிலவழகன், ராமர் திவ்வியநாதன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். போராட்டம் நடைபெறுவதையொட்டி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விடுமுறையில் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.