புதுக்கோட்டை, மார்ச் 12 - ரூ.7.44 கோடி செலவில் 21 புதிய அரசு மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை கட்டிடங்களை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூ.7.44 கோடி செலவில் 21 புதிய அரசு மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினர்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “21 புதிய அரசு மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத் துறை கட்டிடங்கள் மூலம் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மருத்துவத்திற்காக நீண்ட தூரம் சென்று வருவது தவிர்க்கப்படும். மேலும் தங்களது இல்லங்களுக்கு அருகிலேயே மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “திருமயம் ஊராட்சி ஒன்றியம், இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகள், விராலிமலையில் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் செவித்திறன் ஆய்வு அரங்கம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி மற்றும் விராலிமலை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை விபத்துப் பிரிவு உள்ளிட்ட முடிவுற்ற மருத்துவக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன” என்றார்.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், “2023-2024 நிதியாண்டில் இதுவரை 21,056 பயனாளிகளுக்கு ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 3,669 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாத்தான் வேதம் ஓதலாமா?
போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போராட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். புதுக்கோட்டை யில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மருத்துவத் துறை சார்ந்த 2,500 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்து வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டன. அவை படிப்படியாக முன்னுரிமை அடிப்படையில் தற்போது வரை 900 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த 31 மாதங்களில் 91 கட்டிடங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் உள்ள முழவி என்ற மலை கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் எங்கெங்கு எல்லாம் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்களோ, அவர்களுக்கு சித்த மருத்துவத்தை கொண்டு செல்வதற்கு, ‘பழங்குடி மக்களை தேடி சித்த மருத்துவம்’ என்ற வகையில் வாகனங்கள் மூலம் சித்த மருத்துவ வாகனங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களுக்கு தேவையான சித்த மருத்துவம், அந்த வாகனம் மூலம் அளிக்கப்படும் என்ற வகையில் 10 மாவட்டங்களில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக் கழகம் மட்டுமல்ல, நிறைய மருத்துவ பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார்.
1021 மருத்துவப் பணியிடங்கள், 977 செவிலியர்கள், 331 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் கடந்த ஒன்றரை மாத காலத்தில் நிரப்பப்பட்டுள்ளன. எம்ஆர்பி மூலம் 1021 மருத்துவப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, அதிகபட்ச காலிப் பணியிடங்கள் எங்கெல்லாம் இருந்ததோ, அங்கெல்லாம் பணியமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் தற்போது அதிகரிப்பதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போராட்டம் நடத்துவது ‘சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்’.
தமிழ்நாட்டில் மறுவாழ்வு மையம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட தனியார் மறுவாழ்வு மையத்தில் 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு இன்னல் களைச் சந்தித்தனர். அது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தொகுதிதான். இவ்வாறு அவர் கூறினார்.