முற்போக்கு தமிழ் இலக்கிய மரபின் முன்னத்தி ஏர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான மார்க்சிய இயக்கத்தின் மூத்தவர் தோழர் கு.சின்னப்பபாரதி (88) திங்களன்று மாலை நாமக்கல் மாவட்டத்தில் முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தாகம், சங்கம்,சர்க்கரை,பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலைநில ரோஜா ஆகிய ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். சுரங்கம் நாவல் அவருக்கு புகழ் பெற்று தந்தது நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வியலை அவர்களுடன் தங்கி இருந்து நாவலாக எழுதியவர். கு.சிபாவின் நாவல்கள் ஆங்கிலம் பிரென்ச்,டேனிஷ், சிங்களம், உஷ்பேக், மலையாளம், கன்னடம்,தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராத்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலக்கிய பயணங்களுக்காக சென்று வந்துள்ளார் இலங்கை முற்போக்கு பட்டம் வழங்கிய விருது, தில்லி தமிழ் சங்கம் விருது, கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பொற்கிழி விருது, மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி வழங்கிய விருது உட்பட பல்வேறு விருதுகள் தமிழ் அமைப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன.
மனைவி செல்லம்மாள் உடன் வசித்து வந்த சின்னப்பபாரதி கடந்த சில வாரங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்த நிலையில் திங்கள் மாலை 6 மணி அளவில் உயிரிழந்தார் இவருக்கு சி.பாரதி, சி.கல்பனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர் மறைந்த சின்னப்ப பாரதியின் உடல் மின்மயானத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.