திருவாரூர், பிப்.3- திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா, தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு, நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி, மாவட்டச் செயலாளர் எம்.சேகர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மழை யால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் அறுவடை செய்த நெல்லை எடை போட முடியாமல் நேரடி கொள்முதல் நிலையத்தில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. தார்ப்பாய் போட்டு மூடி வைத்தாலும் தொடர் மழையால் ஈரம் காத்து நெல் முளை விட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடி யாக எவ்வித ஈரப்பதத்தையும் கணக்கிடாமல் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமை யன்று தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் வேளாண் துறை சார்பாக 10 குழுக்கள் அமைத்து உடனடியாக பயிர் சேதத்தை கணக்கெடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாரபட்சம் இன்றி களஆய்வு செய்ய வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவார ணம் வழங்க உடனே வேண்டும். எனவே, அதிகாரிகள் பயிர் சேத ஆய்வுக்கு நேரில் சென்று, கணக்கெடுப்பை விரைந்து மேற்கொண்டு பயிர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
இந்நிலையில், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பின்னவாசல், வெப்பத்தாங்குடி, வடகரை, புலி வலம், கள்ளிக்குடி, கானூர், பள்ளி வாராமங்கலம், ஒடாச்சேரி, வடகால் பகுதியில் வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமையில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் ஊடு பயிர்களின் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்படி, இப்பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 261 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாகவும், ஊடு பயிர்களான உளுந்து 80 ஹெக்டர் மற்றும் பச்சைப்பயிறு 3, 414 ஹெக்டர் மழையினால் முற்றி லும் சேதம் அடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.