திருவள்ளுர், மார்ச் 11- காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையி லிருந்து குழந்தையை திருடிய தம்பதி யினரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன் - சுஜாதா. இவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறுப் பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு வளாகத்திற்குள் சென்ற ராமு - சத்யா என்ற தம்பதியினர் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை அங்கி ருந்து திருடிக்கொண்டு மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேற முயன்றுள்ளனர். அதற்குள் குழந்தையை காணவில்லை என பதறித் துடித்த பெற்றோர் கூச்சல் போட்டுள்ளனர். குழந்தையைத் திருடிய தம்பதியினர் மருத்துவமனை வளாகத்தை விட்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல முற் படும்போது, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் குழந்தையைத் திருடியது தெரியவந்தது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த தன் பேரில் காவல்துறையினர் குழந்தையை திருடிச்சென்ற தம்பதியினரை விசாரணைக் காக அழைத்து வந்தனர். சத்யாவுடன் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் மகப்பேறு வளாகத்தில் மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும் குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடி யாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் விசாரணையில் அவர்கள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையில்தான் முழு விவரம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். அரசு மருத்துவ மனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே குழந்தையை எளிதாக திருடிச்சென்றதற்கு காரணம் என அங்கு சிகிச்சை பெறுவோர் தெரிவிக்கின்றனர்.