ஆட்டோ தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இந்து முன்னணி பிரமுகர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவிநாசி ஒன்றியம் ஆட்டையம்பாளையத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இந்து அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அழகுபாண்டி ஆகிய இருவரும் ஆட்டையம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவது சம்பந்தமாக ஆட்டோ தொழிலாளிகளிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ தொழிலாளிகள் இந்து முன்னணியைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அழகுபாண்டி ஆகிய இருவர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் ஆட்டோ ஸ்டாண்டில் தகராறில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் ஆட்டையம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்டில் ஞாயிறன்று இந்து முன்னணி பிரமுகர் அழகுபாண்டி அவருடன் வந்தவரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அழகுபாண்டி உடன் வந்த நபர் திடீரென்று ஆட்டோ தொழிலாளியான கந்தசாமி(40) மீது தோள்பட்டையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தரணிஷ் என்ற இளைஞருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .
இதனையடுத்து, அப்பகுதி ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்து முன்னணி பிரமுகர் ஸ்ரீதர், அழகு பாண்டி அவருடைய நண்பர் உள்ளிட்டோரை உடனே கைது செய்யக்கோரி கோவை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த அவிநாசி காவல்துறையினர் அரிவாளால் வெட்டிய நபர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.