திருப்பத்தூர்,நவ. 24- திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு ஊராட்சி அருகே உள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த பகுதியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வடுக முத்தம்பட்டி அரசு பள்ளியில் பயில்கின்றனர். இவர்கள் திருப்பத்தூரில் இருந்து மயில் பாறை வரை செல்லும் அரசு பேருந்தில் தினசரி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல் நாராயணபுரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றனர். திருப்பத்தூர் ஆலங்காயம் பிரதான சாலை நாராயணபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் பேருந்தில் வந்த 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். மாணவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் 2 மணி நேரம் ஆகியும் காவல் துறையினர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.