பாபநாசம், நவ.11 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள விதியின்படி மொத்த மருத்துவ மாணவ இருக்கைகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 85 சதவீதம் சொந்த மாநில ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்க வேண்டும். இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான இடங்களில் 772 இடங்களை தமிழ்நாடு, அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கியுள்ளது. இந்த 772 இடங்களில், அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அல்லது தமிழ்நாட்டை சேராத மாணவர்களும் விண்ணப்பித்து மருத்துவப் படிப்பில் சேரலாம். 669 இடங்கள் காலியாக இருக்கும் இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக உள்ள 772 இடங்களில் மருத்துவக் கல்வி பயில தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சரிவர விண்ணப்பிக்காத காரணத்தால் இதுவரை 103 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு மீதமுள்ள 669 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வருகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவ, மாணவியர்களும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 85 சதவீத இடங்களிலேயே போட்டி போடுவதால் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மருத்துவ இடங்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 85 சதவீதத்திற்கு, அனைத்து மாணவர்களும் போட்டியிடுவதால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் வெறும் பகல் கனவாகவே உள்ளது. எனவே, மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.