புதுக்கோட்டை, அக்.28 - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் செய்து வந்ததன் பயண அனுபவப் பகிர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், ‘வீதி’ கலை இலக்கியக் களமும் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவிற்காக அமெரிக்கா சென்று வந்த தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன், தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்த புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி, சீனாவுக்கு சென்று வந்த புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த வீதி இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா ஆகியோர் தங்களின் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மைதிலி வரவேற்க, கஸ்தூரிரெங்கன் நன்றி கூறினார். தமுஎகச மாவட்டச் செயலர் எம்.ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.