தஞ்சாவூர், மே 14 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி நடைபெற்றது. இதில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் பத்து பேர் கலந்து கொண்டனர். தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் என்.முத்துக்குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பற்றி, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.விஜயப்பிரியா, விளக்கமளித்தார். மாணவிகள் குழுத் தலைவி ரா.சி.தாரணி நன்றி கூறுகையில், இத்தொழில்நுட்பங்களை அடுத்து வரும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் எடுத்துரைப்போம்" என்று தெரிவித்தார்.