districts

img

தமிழகத்தில் ரூ. 33,467 கோடிக்கு ரயில்வே திட்டங்கள்

தஞ்சாவூர், பிப்.28-  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.33 ஆயிரத்து 467 கோடிக்கு ரயில்வே திட்டங்கள் நடைபெறுகின்றன என ஒன்றிய ரயில்வே மற்றும் நீர் வளத்துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா தெரிவித்தார்.  தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அம்ரித் பாரத் திட்ட வளர்ச்சி பணிகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு நிகழ் (2025 - 26) பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரத்து 626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2024 - 25 ஆம் ஆண்டை விட ரூ. 300 கோடி கூடுதலாகும்.  கடந்த 10 ஆண்டுகளில் 1,303 கி.மீ. தொலைவுக்கு புதிதாக இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 242 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருப்புப்பாதை மின்மயமாக்கல் பணி 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் நூறு சதவீதம் முடிக்கப்படும்.  பல்வேறு மாவட்டங்களில் ரூ.33 ஆயிரத்து 467 கோடிக்கு 22 ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் 77 ரயில் நிலையங்களில் ரூ. 2 ஆயிரத்து 950 கோடிக்கு மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ. 1,460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் நிலையத் திட்டத்தில் ரூ. 12.37 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரூ.6.50 கோடி மதிப்பிலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரூ.13.50 கோடி மதிப்பிலும், காரைக்கால், மாகே ரயில் நிலையங்களில் ரூ.109 கோடியிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் நிறைவேற்றித் தரப்படும்” என்றார்.  ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன், முதன்மை திட்ட மேலாளர் நசீர் அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.