districts

உளுந்தில் அதிக மகசூல் பெற இலைவழி கரைசல் தெளிப்பதன் அவசியம்

தஞ்சாவூர், மே 25-  

    பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சித்திரைப் பட்டத்தில் உளுந்து விதைப்பு மேற்கொண்டுள்ள விவ சாயிகள் அதிகமாக மகசூல் பெற இலைவழி உரம் தெளித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    பயறுவகை பயிர்களில் உண்டாகும் பூக்கள் உதிர்வதை தடுத்து, காய்களாக உருவாகி, செடிகளில் காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பூ பூக்கும் தருணத்தில் (30ஆம் நாள்) ஒரு முறையும், மற்றும் 15  நாள் கழித்து ஒருமுறையும், ஒரு ஏக்கருக்கு இரண்டு சத வீதம் டி.ஏ.பி கரைசலை இலை வழியாக  தெளிப்பதன் மூலம் அதிக மகசூலை பெறலாம்.

 இரண்டு சதம் டிஏபி கரைசல்  தயாரிக்கும் முறை

     ஒரு ஏக்கருக்கு தேவையான நான்கு கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து  ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

    பின்னர் மறுநாள் நீரை வடிகட்ட வேண்டும்.  வடிகட்டிய நீரில் 190 லிட்டர் தண்ணீரை சேர்த்து 200  லிட்டர் டி.ஏ.பி கரைசலை தயார் செய்தல் வேண்டும்.

     இந்த  கரைசலை மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் அல்லது  விசைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  இரண்டு சதம் டி.ஏ.பி கரைசலை தெளிக்கும் போது  நிலத்தில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும். இந்த  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி தனது செய்திக்  குறிப்பில் கூறியுள்ளார்.