தஞ்சாவூர், ஜன.13 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக பேராவூரணியில் சேதமடைந்த நிலையில் உள்ள ரயில்வே கேட் சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. தீக்கதிர் நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறைக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், சேது சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடுகிறது. இந்த கேட்டில் இரண்டு ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவிலான சிமெண்ட் கற்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே இடைவெளி இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது. ஏற்ற, இறக்கத்தில் பயணிக்கும் கார், பேருந்து போன்ற வாகனங்கள் குலுங்கி மோதுவதால், இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நெடுஞ்சாலை துறையால், ரயில்வே கேட்டிற்கு இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் அருகேயும் பள்ளமாக உள்ளது. இதனால் இந்தச் சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சமதளமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து ஜன.10 அன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையே நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையை சீரமைத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை ரயில்வே துறையினர், தண்டவாளத்தையொட்டி சிமெண்ட் கற்களுக்கு இடையே பள்ளமாகவும், சமதளம் இல்லாமல், ஒழுங்கின்றி இருந்த சாலையை ரயில்வே பணியாளர்களைக் கொண்டு சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கும், செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.