தஞ்சாவூர், ஜூன் 12-
தனியாருக்கு சாதகமான ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூரில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தனியாருக்கு சாதகமான ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த வேண்டுமென, தஞ்சாவூர் மாநகரத்தில் செயல்படும் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களையும் மாநகராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆட்டோ தொழிலாளர்களுக்கும், பயணிகளுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத தனியார் ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
தஞ்சாவூர் மாநகரில் ஓலா, ஊஃபர், ராபிடோ பைக் டாக்ஸி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலிகளை அமல்படுத்தக் கூடாது.
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் இந்தச் செயலிகளை தடை செய்ய வேண்டும். கேரள மாநிலத்தில் அரசே ஆட்டோ செயலியை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும் வகையில் செயல்படுத்துவதை போன்று, தமிழ்நாடு அரசு பொது ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, ஐஎன்டியூசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலர் சி.ஜெயபால், மாவட்டத் துணைச் செயலர் கே.அன்பு, ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்டத் தலைவர் வெ.சேவையா, செயலர் துரை.மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலர் என்.மோகன்ராஜ், தொமுச ஆர்.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
இதில் அனைத்து ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, புதிய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகி கே.அண்ணாத்துரை வரவேற்றார். வி.கருணாகரன் நன்றி கூறினார்.