districts

img

அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க கோரி மனு

கரூர், டிச.14 - கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட தளிவாசல் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி, களத்துப்பட்டி, குறிஞ்சி மலை பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வீடுகள் அமைக்க போதிய இடவசதிகள் இல்லை. எனவே அவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புல எண்.694-ல் 79 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு குறிஞ்சி மலையில் புல‌ எண்.520ல் 35 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.   தமிழக அரசு இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவிற்கான இடங்களை, பொதுமக்களுக்கு அளவீடு செய்து வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. கலைஞரின் கனவு இல்லம் மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் முறையான பட்டா இருந்தும் அதற்கான இடங்களை அளவீடு செய்து வழங்காமல் இருப்பதால் வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.  எனவே அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடத்தினை அளவீடு செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுவை கடவூர் வட்டாட்சியரிடம் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழங்கினர். இந்நிகழ்விற்கு விதொச கடவூர் ஒன்றியச் செயலாளர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் ஒன்றியச் செயலாளர் பி.பழனிவேல் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.