மயிலாடுதுறை, மே 19- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவிளையாட்டம் ஊராட்சி குரும்பக்குடி, ஆலக்கரை, கோவில்பத்து ஆகிய கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் குரும்பகுடி பகுதியில் உள்ள நல்லாடை-முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஒத்தையடி மரப்பாலத்தை கடந்து வந்து பொறையார், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பல ஆண்டுகளாக சென்று வந்தனர். மேலும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்களின் போக்குவரத்து வசதி இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் அப்பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில், குரும்பக்குடி மற்றும் நல்லாடை முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிக்கு நிவேதா முருகன் எம்எல்ஏ கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். தற்போது குரும்பகுடி - நல்லாடை முக்கூட்டு சாலையை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.