தஞ்சாவூர், ஜூன்.8 - தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ. 26.98 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 7 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறைத் துணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் கோ.கவிதா, செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமையன்று திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ரூ. 26 லட்சத்து 98 ஆயிரத்து 967 காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும் 210 கிராம் வெள்ளியும், இருபத்தி நான்கரை கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.