அறந்தாங்கி, மார்ச் 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலை மின்மயானம் அருகே மனமகிழ் மன்றம் என்ற திடீர் சாராயக்கடை திறக்க அனுமதிக்க கூடாது, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சட்டவிரோத சாராய விற்பனை செய்யும் மனமகிழ் மன்றத்தை இழுத்து மூட வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் மனமகிழ் மன்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி நகரக் குழு சார்பாக, பட்டுக்கோட்டை சாலை மின் மயானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எல். அலாவுதீன் தலைமை வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. தங்கராஜ், தென்றல் கருப்பையா, ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து, வட்டாட்சியர் கருப்பையா, கலால்துறை வட்டாட்சியர் பரணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வரும் செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதுவரை பட்டுகோட்டை சாலை மனமகிழ் மன்றம் திறக்கப்படமாட்டாது என்று வருவாய்த்துறையினர் அறிவித்தனர். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்பட்டது.