தஞ்சாவூர், ஜூன் 2-
தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மணிமண்டபத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தும் முதுகலை பட்டப்படிப்பு படித்தும் வரும் மாணவர்களுக்கான களப் பயிற்சியை ஆர்.சிவானந்தம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு பின்பு அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலான இடம் தேடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), பூதிநத்தம் (தருமபுரி மாவட்டம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை மாவட்டம்) உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணி நடைபெறுகிறது.
தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தி வருகிறது. இதில், படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் வியாழக்கிழமை முதல் 10 நாள்களுக்கு களப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், மாணவர்களுக்கு வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்கால கோயில்களைப் பாதுகாத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக தொடர்புடைய வல்லுநர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது’’ என்றார்.