districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடு : பட்டியல் இன மக்கள் கோவிலில் வழிபட அனுமதி

தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலையீட்டுக்கு பிறகு கோவிலில் வழிபட பட்டியல் இன மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் ஊராட்சியில் மலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குறிப்பிட்ட ஒரு சில சாதியினர் மட்டுமே சாமி கும்பிட அனுமதிக்கப்பட்ட நிலையில், பட்டியல் இன மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது, காவல்துறை, அரசுத்துறை தலையீட்டால் பட்டியல் இன மக்கள் சாமி கும்பிட முடிந்தது. 

இந்நிலையில், மே.11 வியாழக்கிழமை அன்று குறிப்பிட்ட சமூகம் மட்டும் கோவில் விழா நடத்திட கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை மாலை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கே. பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பி. சத்தியநாதன், ஆலம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சந்தித்து, "கோவில் திருவிழாவில் அனைத்து தரப்பு மக்களும், சாதி வேறுபாடு இன்றி கலந்து கொண்டு சாமியை வழிபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி மனு அளித்தனர். 

இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, வருவாய்த்துறை மேற்பார்வையில், காவல்துறை பாதுகாப்புடன் புதன்கிழமை அன்று பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய உறுதுணையாக இருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளுக்கு பட்டியல் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.