குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே உரிய தேதியில் தண்ணீரை திறக்க முடியும் என்பதால் இதுவரை 18 முறை மட்டுமே குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
போதுமான நீர் இருப்பு இல்லாததன் காரணமாக இதுவரை 60 முறை உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படாமல் காலதாமதாக திறக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய தேதிக்கு முன்னதாக இதுவரை 10 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததன் காரணமாக குறுவை சாகுபடிக்கு குறித்த தேதியான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தனது முழு கொள்ளளவான 120 அடியில் 117 அடியை எட்டியது
இதனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக மே 24ஆம் தேதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்
அதனை தொடர்ந்து மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.
அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் காமலாபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுக திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
வழக்கமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி ஜூன் மாதத்தில்தான் குறுவை சாகுபடியை துவங்குவார்கள்
அதனைத் தொடர்ந்து சம்பா பயிர்கள் சாகுபடியின் போது அவ்வப்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தனர்.
இதனை தவிர்க்கும் வகையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்னரே துவங்கும் வகையில் தற்போது மே மாதத்திலேயே அணை திறக்கப்படுகிறது
அதாவது மேட்டூர் அணையின் வரலாற்றில் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னரே அதாவது கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
தற்போது, மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மின் விசையால் தூக்கி தண்ணீரை திறந்து வைத்தார்
தொடர்ந்து அணையில் இருந்து காவிரியில் வெளியேறிய தண்ணீருக்கு முதலமைச்சர் மலர் தூவி வரவேற்றார்.
அவரை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஆகியோர் தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்றனர்
முதல் கட்டமாக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
தொடர்ந்து விவசாயிகளின் தண்ணீர் தேவையை பொறுத்து நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து அணையின் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணையின் எண்பத்தி ஒன்பது ஆண்டு கால வரலாற்று புகைப்பட கண்காட்சியினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்
தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது கடைமடை பகுதி வரை சென்றடைய ஏதுவாக கடந்த மாதமே 80 கோடி ரூபாய் செலவில் ஆறுகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன
எனவே தற்போது திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் கூடுதல் சாகுபடி செய்து புதிய சாதனை படைக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் அணையிலிருந்து காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின் உற்பத்தியும், 7 கதவணைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.