districts

img

60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க மறுப்பது ஏன்?

சென்னையின் புறநகர் பகுதியாக  வேளச்சேரி இருந்தது. வேளச்சேரி ஏரி, வீராங்கல் ஓடை, ஆதம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளையொட்டி விவசாயம் நடந்தது வந்தது. நகர மயமாதலால் விவசாயம் அழிந்து அந்த பகுதிகள் குடியிருப்பு களாக மாறின. பெரு நகர வளர்ச்சி யின் காரணமாக அதி வேகமாக வேளச்சேரி வளர்ந்தது. இதனையொட்டி பல்வேறு பகுதிகள் உருவாகின. குறிப்பாக, வேளச்சேரி ஏரியின் பெரும்பகுதியை மனைகளாக பிரித்து அரசே விற்பனை செய்தது. அதாவது, 265 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேளச்சேரி ஏரி தற்போது 55 ஏக்கர் மட்டுமே கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது.  200 ஏக்கர் ஏரியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடிசைமாற்று வாரியம் வாயிலாக மனைகளாக பிரித்து விற்றது. இதனையொட்டி அம்பேத்கர் நகர், கக்கன் நகர், நேரு நகர், பெரியார் நகர், காமராஜபுரம், லட்சுமிபுரம், ஏ.எஸ்.கே.நகர், இந்திரா காந்தி நகர்,  உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள பல ஆயிரம் குடும்பங்களுக்கு சப்-டிவிஷன் செய்து அரசு பட்டா கொடுத்துள்ளது.  அதேசமயம் ஏரிக்கரையின் மீது உள்ள காந்தி நகர், சசி நகரில் உள்ள 1500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்த குடியிருப்புகளை ஆக்கிர மிப்புகளாக வகைப்படுத்தி 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு நோட்டீஸ் வழங்கியது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தொடர் போராட்டங்களை நடத்தியது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கு (எண் 7664/2009) விசாரணையின்போது, “பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மாவட்ட ஆட்சியருக்கு  2.4.2002 அன்று அனுப்பிய கடிதத்தில், சர்வே எண் 123/1, ஏற்கெனவே இருந்த நீர்நிலை அமைப்பிலிருந்து குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே,  அரசாணை 854/2005 மற்றும் 34/2008 ன் படி குடிமனைப் பட்டா வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அச்சுறுத்தலை கைவிட வேண்டும்
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தமிழக அரசு நோட்டீஸ் வழங்கி சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும். 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தையடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, நீர்நிலைகளில் புதிய குடியிருப்புகள் உருவாகாமல் இருக்க வேலிகளை அமைத்தது. அதனை அடிப்படையாக கொண்டு, நிலவகை மாற்றம் செய்து, குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். அரசு ஆவணங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை என்று குறிப்பிடப்பட்ட பகுதிகள், தற்போது குடியிருப்புகளாக மாறிவிட்டன. அத்தகைய பகுதிகளுக்கு அரசு கொள்கை முடிவெடுத்து பட்டா வழங்க வேண்டும். இதனை செய்யாமல் இருப்பது பிரச்சனையை மேலும் சிக்கலாகும். குடியிருப்பு பிரச்சனைகளில் நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் போன்றவை, கள நிலவரங்களை அறியாமல் உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. வழக்கு விசாரணையின் போது, உண்மை கள விவரங்களை கூறி, வலுவாக வாதாட வேண்டும்; மேல்முறையீட்டிற்கு செல்ல வேண்டும். மாறாக, மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அச்சுறுத்துவது சரியானதல்ல. -ஆர்.வேல்முருகன் தென்சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)

இந்த தீர்ப்பை அரசு நிறைவேற்றவில்லை. மாறாக, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து, விவரங்களை கோரி யுள்ளது. அதற்கு முறையாக பதி லளிக்க இயலாத பொதுப்பணித் துறை, 2018ல் ஆண்டு நீதி மன்றம் பிறப்பித்த ஒரு உத்தர வின் அடிப்படையிலும், பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்கு அடிப்படையிலும் கடந்த மாதம் 22ந் தேதி மக்களுக்கு நோட்டிஸ் கொடுத்துள்ளது. இதனை கண்டித்து மார்ச் 1 அன்று அந்தப்பகுதி யில் ஊர்க்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், காந்திநகர்-சசிநகர் பொதுநலச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.  அப்போது பேசிய ஜி.ராம கிருஷ்ணன், “வேளச்சேரி ஏரி கரையோரம் வசிக்கும் மக்களில் பெரும்பகுதியினர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். மாணவர்களில் பெரும் பகுதியி னர் அரசுப்பள்ளியில் படிப்பவர்க ளாகவும் உள்ளனர். எனவே, எளிய மக்களை அரசு அச்சுறுத்தக் கூடாது.  2009ம் ஆண்டு பட்டா வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 14 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இருப்பது சரியல்ல. எனவே, நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். இதற்காக களப்போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவோம். ஏரியை பாதுகாக்க மக்களோடு இணைந்து நிற்போம்” என்றார்.

அடிப்படை வசதி இருந்தும் பட்டா இல்லை
ஆதம்பாக்கம் காவல்  நிலையம் முதல் வேளச் சேரி 100 அடி சாலை வரை ஏரிக்கரை சாலை அமைந்துள்ளது. இதில் காந்தி நகர்,சசி நகர் என இரண்டு குடி யிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு 60 வருடங்க ளுக்கு மேலாக, 3வது தலைமுறையாக வசித்து வருகிறோம். 3 கோவில்கள், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.  இங்குள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு, மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏரிக்கரை சாலை யின் ஒருபகுதி தார்ச்சாலையாக மாற்றப் பட்டுள்ளது. சாலை முழுவதும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வள வும்  செய்து கொடுத்துவிட்டு, பட்டா கொடுக்க மறுப்பது ஏன்? இந்தப் பகுதியில் வசிப்பர்கள் வீட்டுவேலை, கட்டிட வேலை, தினக்கூலி என முறைசாரா தொழி லாளர்களாக உள்ள னர்.  ஏரிக்கரை முழுவதும் மரங்கள் நிறைந்து பசுமையான இடத்தி லிருந்து எப்படி வெளியேற முடியும். ஒருபகுதி மக்கள் தற்போதும் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். குடிப்ப தற்கு மட்டுமே மெட்ரோ வாட்டரை பயன்படுத்துகிறோம்.   2008ம் ஆண்டு குடியிருப்புகளை அகற்ற வந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி மக்களை பாது காத்தது. இப்போது மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சிதான் முன்நிற்கிறது. ஒருபோதும் குடியிருப்பு களை விட்டுக் கொடுக்க மாட்டோம். 60 ஆண்டு களாக வாக்களித்து  வரும் மக்களுக்கு பட்டா கொடுக்க அரசு ஏன் தயங்குகிறது?  -காந்திநகர்-சசிநகர் பொதுநலச் சங்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், தங்கராஜ்

 

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 

ஏரிக்கரை சாலையில் அடுக்குமாடி, குடிசை, சிமெண்ட் ஓடு போட்ட வீடுகள் என பல வகையாக குடியிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக உழைத்து சேமித்த பணத்தில் கட்டிய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. தற்போதுள்ள வீடுகளை முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும். அதேசமயம் மக்களை பாதிக்காத வகையில் ஏரியை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
கே.வனஜகுமாரி, 
மாவட்டச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

வேளச்சேரி தொகுதி முழுவதும் குடிமனைப்பட்டா பிரச்சனை உள்ளது. 60-70 வருடங்களாக வசித்து வரும் மக்களுக்கு கூட அரசு பட்டா வழங்க மறுக்கிறது. வேளச்சேரி ஏரி, ஏரிக்கரை பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்குவதற்கு மாறாக, வெளியேற்றுவதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்.
எஸ்.முகமது ரஃபீ
வேளச்சேரி பகுதிச் செயலாளர், சிபிஐ(எம்)