districts

டிரோன் மூலம் நானோ யூரியா உரங்கள் தெளிப்பு

சென்னை,ஜூன் 21-

     திருவண்ணாமலை அருகே சு.வாளவெட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கரும்பு பயிரில் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்களை டிரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.  செயல்விளக்கத்தை தொடர்ந்து டிரோன் தொழில் நுட்பம், நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  

    அப்போது வேளாண் அதிகாரிகள் கூறுகையில், “நானோ உரங்களை டிரோன் மூலம் தெளிப்பதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது”என்றார்.

    நானோ உரங்கள் இலை வழி தெளிக்கப்படுவதால் மண் மற்றும் நீர் நிலைகள் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதன் மூலம் விளைச்சல் ஏதும் குறையாது. செலவினைக் குறைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு நானோ உரங்கள் மற்றும் டிரோன் தெளிப்பு உள்பட ஒரு முறைக்கு ஏக்கருக்கு ரூ.1,700 வரை செலவாகும் என்று தெரிவித்தனர்.