சென்னை, மார்ச் 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை வங்கி அரங்க கிளை உறுப்பினர் அகோர பாண்டியன் ஞாயிறன்று (மார்ச் 19) காலமானார். அவருக்கு வயது 84. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அகோர பாண்டியன் வங்கிப் பணியில் இணைந்த தொடக்க காலத்திலேயே மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டார். 1978ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சி சார்ந்த இதழ்களை கட்சி உறுப்பினர்களிடம் கொண்டு சென்று சந்தா சேகரிப்பில் பெரும் பங்களிப்பு செய்தவர். காரைக்குடியில் பெரும் பங்காற்றிய எஸ்.ஆர்.கே (எ) தோழர் எஸ்.ராமகிருஷ்ணனின் மகள் நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அவரது இணையர் நாகலட்சுமி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் முன்னணி ஊழியராக செயலாற்றியவர். தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர்கள் சி.பி கிருஷ்ணன், என். ராஜகோபால், டி.ரவிக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி திங்களன்று (மார்ச் 20) காலை மாடம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.