திருவண்ணாமலை, ஆக.2-
வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டி முடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், பாதிரி ஊராட்சி பகுதியில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 6 பயனாளிகளுக்கு கடந்த ஜூன் மாதம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
இதற்காக மூன்று முறை ஒப்பந்த தாரருக்கு, பயனாளிகள் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், சுமார் 4 அடி உயரம் வரை கட்டிட பணி நடைபெற்றது. பின்னர் பணிகள் நடைபெற வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடியிருப்புகளை விரைந்து கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கோரி வந்தவாசி வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சங்க பிரதிநிதிகள் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். அப்போது, உடனடியாக பயனாளிக்கு பணி ஆணை வழங்குமாறு அதிகாரிகளுக்கு, உதவி இயக்குநர் (தணிக்கை) உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். இதனால் கோபமடைந்து, வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணி ஆணை வழங்கி, வீடு கட்டும் பணியை விரைவாக முடிப்பதை உறுதி அளித்தார். பிறகு, போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சுகுமார் தலைமை தாங்கினார். சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர், யாசர் அரபாத், ராஜந்திரன், தமிழ்நாடு மலைவாழ் சங்க நிர்வாகி வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.