சென்னை,மார்ச்.9- அரசுப்பள்ளி மாணவர்களின் பற்களை பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் புன்னகை - பல் பாதுகாப்புத்திட்டம் சென்னையில் வியாழனன்று (மார்ச்.9) தொடங்கப்பட்டது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், இத் திட்டத்தை தொடங்கி வைத்து, நடமாடும் பல் மருத்துவ ஊர்தியில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை பார்வையிட்டனர். மேலும் “புகையிலை ஒழிப்பு”கையெழுத்து பிரச்சார பலகையில் கையெழுத்திட்டு, மாணவர்களின் கல்விப்பொருட்கள், சிற்றேடுகள் மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டனர்.
வாய்வழிநோய்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன்தரும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல் பரிசோதனைகளை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல்சொத்தை, ஈறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதைகண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இது சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தமாக மாணவ,மாணவியருக்கும் பல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
நோய்களில் இருந்து காப்பாற்ற முயற்சி
இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கு ஏறத்தாழ 50விழுக்காடு முதல் 60விழுக்காடு குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது. எனவே இந்த நோய்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்களை காப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.