விழுப்புரம், டிச. 19- விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் கடந்த ஓராண்டு காலமாக முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கனிகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், அடுத்த 15 நாட்களுக்குள் மனு அளித்த அனை வருக்கும், அவர்களின் கணக்கில் உதவித்தொகைக்கான பணம் ஏற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் மோகன் திங்களன்று (டிச. 19) பயணாளிகளுக்கு வழங்கினார். இது குறித்து நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமாரி, தனி வட்டாட்சியர் கற்பகம் ஆகியோருக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.