districts

img

டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

சென்னை, ஜூலை 10- இந்தியன் ஆயில் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து சென்னை மற்றும் ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தண்டையார்பேட்டையில் புதன்கிழமை (ஜூலை 10) நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், ராணிப் பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் பணி புதன்கிழமை ஒரு நாள் தடைபட்டது இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், தண்டையார்பேட்டை அத்திப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனம் உள்ளது. டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகள் குண்டும் குழியுமாகவும் தரமற்றதாகவும் உள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் மாற்று வழியில் லாரிகளை இயக்கி செல்வதால் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அதற்குண்டான டீசல் பணம் வழங்குவதில்லை. இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் கால தாமதத்திற்கு இந்தியன் ஆயில் நிர்வாகம் ரூ.500 , 1000 அபராதம் விதிக்கிறது. மேலும் மாற்றுப் பாதையில் செல்லும் போக்குவரத்து காவல் துறையினரும் தேவையில்லாமல் அபராதம் விதிக்கும் சூழல் உள்ளது. ஒரு சில லாரிகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிறு பிரச்னைக்கு கூட ஐஓசிஎல் நிர்வாகம் லாரிகளின் மீதான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் சர்வாதிகார போக்கில் ஈடுபடுகிறது. நகர்புறத்தில் லாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றனர். மேலும் உடனடியாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களில் செயல்படும் டேங்கர் லாரிகளை ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.