விழுப்புரம், ஏப்.15- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கடலி ஊராட்சிக்குட்பட்டது வணக்கம்பாடி. இந்த கிராமத்தில் வராகநதி கால்வாய் அருகில் பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மின்சாரம், குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. இந்த நிலையில், அந்த மக்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் டி.முருகன், வட்டகுழு உறுப்பினர்கள் ஹரிஹரகுமார், வெங்கடபதி ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மேல்மலையனூர் வட்டாட்சியரை சந்தித்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த சந்திப்பின்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர் டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எழில் ராஜா, வட்டக் குழு உறுப்பினர்கள் குமார், ஏழுமலை ஆகியோர் இருளர் இன மக்களும் உடனிருந்தனர்.