மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
செங்கல்பட்டு,ஆக. 26- இந்தியாவில் புகழ்பெற்ற மாமல்ல புரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணி கள் வருகை தற்போது அதிகரித்திருப்ப தாகஅரசு தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்களான அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றம் சாலுவான் குப்பம் பகுதி யில் உள்ள புலிக்குகை உள்பட பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக, நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வ தால், சர்வதேச சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையிலானால் மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா பயணி களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அதன்பின்னர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும், கொரோனா தொற்று பரவல் காரண மாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், மீண்டும் சுற்றுலா பயணி களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஏற்பாடுகள் மேற்கொள் ளபட்டு வருகிறது. மேலும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இங்கு நடை பெற்றதால், மீண்டும் மாமல்லபுரத்துக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வரு கையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தார். இதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு 57 ஆயிரத்து 622 பயணிகள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 4 லட்சத்து 7 ஆயிரத்து139 ஆக உயர்ந்தது. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு 11லட்சத்து 74ஆயிரத்து 899 பேரும் நடப் பாண்டான 2024-ம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையில் 6 லட்சத்து 45 ஆயிரத்து 296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும். மேலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நடப் பாண்டான 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில்15 கோடிய 49 லட்சத்து10 ஆயிரத்து 708 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த மாமல்ல புரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சுற்றுலா பயணி களுக்காக பொதுக் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலிபர் சங்க வேளச்சேரி பகுதி பேரவை
சென்னை, ஆக. 26 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி பேரவை ஞாயிறன்று (ஆக.25) பகுதி தலைவர் கோபி தலை மையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, பொரு ளாளர் சே.திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 10 பேர் கொண்ட பகுதி குழுவின் தலைவராக ரகேஷ், செயலாளராக குமரன், பொருளாள ராக கவுதம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்
காஞ்சிபுரம், ஆக. 26- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , செவ்வா யன்று காலை 10 மணிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுமக்களிடம் மனுக்கள் பெறவுள்ளார். இந்த முகாமில், பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
2300 காலிப்பணியிடங்களை நிரப்ப ஐசிஎப் தொழிலாளர்கள் கோரிக்கை
சென்னை, ஆக. 26 - 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஐசிஎப் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐசிஎப் யுனைடெட் ஒர்க் கர்ஸ் யூனியன் (சிஐடியு), ஷெல் டிவிசன் 13 ஆம் ஆண்டு பேரவை சனிக் கிழமைன்று (ஆக.24) நடை பெற்றது. இந்த பேரவையில், ஒர்க் ஷாப் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 2300 காலியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய வெல்டிங் மோட்டார்கள் வாங்கி தர வேண்டும், வில்லிவாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரவையை சிஐடியு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சி.திரு வேட்டை தொடங்கி வைத்தார். சங்க தலைவர் சி.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொருளாளர் கே.ஜோஷி, நிர்வாகி ஜி.நடராஜ் உள்ளிட்டோர் பேசினர். டிவிசன் தலைவராக டி.வெங்கடேஷ், செயலாள ராக ஜெ.கதிரவன், பொரு ளாளர் வி.வெற்றி செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
செங்கல்பட்டு அருகே சாலையோர குப்பையில் தீ
செங்கல்பட்டு, ஆக.26- செங்கல்பட்டு புறவழிச்சாலை பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் செங்கல்பட்டு நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அங்கு திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதனால், குப்பை முழுவதும் தீ பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் 300 மீட்டர் வரை இந்த புகை சுற்றி பறந்து காணப்படுவதால் இதை கடந்து செல்லும்போது, சில நபர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்கள் யாராவது தீயிட்டு குப்பையை கொளுத்தினார்களா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், நகராட்சி நிர்வாகம் இங்கு எதற்காக குப்பைகளை அதிக அளவில் கொட்டியுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இதுபோல் தீ விபத்து ஏற்படாத வண்ணம் தவிர்க்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேன் டயர் வெடித்து குழந்தை பலி
திருவண்ணாமலை, ஆக. 26- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் பாண்டிச்சேரி கோயிலுக்கு சுற்றுலாவாக சென்றனர். அங்கிருந்து புறப்பட்ட வேன் ஆரணி - விழுப்புரம் சாலை விண்ணமங்கலம் கிராமம் அருகே சென்ற போது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 8 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.10 ஆயிரம் மின் கட்டண பாக்கி: அரசுப் பள்ளிக்கு மின் இணைப்பு துண்டிப்பு
கிருஷ்ணகிரி, ஆக.26- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தைமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தமிழ் வழி துவக்கப் பள்ளியில் 85 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது. மேலும், மின் பழுது ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியில் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் ரூ.2,200 ரூபாய் செலவில் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். பிறகு, மின் விநியோகம் சீரானது. இந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், கடந்த 16 ஆம் தேதி பள்ளிக்கு வந்த மின் ஊழியர்கள், மின் விநியோகத்தை தடை செய்தனர். மேலும், புதிதாக மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியத்தால், மின் விநியோகம் இல்லாமல் வகுப்பறைகளும் சமையல் அறையும் இருள் சூழ்ந்து உள்ளது. இதுகுறித்து, ஓசூர் தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜிடம் கேட்டபோது,“ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தி வந்தோம். பாக்கி இருந்தால் அதை கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும், உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் அவர் கூறினார்.