ஆவடி,அக்.29- சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அச் சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (வயது40) என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெங்க டேசன் கைது செய்யப்பட்டு விசாரித்தபோது அவரும் அவரது கூட்டாளிகள் வேங்கையன் (36) உள்ளிட்ட 3 பேர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வெங்கடேசன், வேங்கையன், உடந்தையாக இருந்த விஜயா, லலிதா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.