districts

மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமின்

சென்னை, ஏப். 2 - வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள்  அமைச்சர் சரோஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் குணசீலன் என்பவர்  அளித்த புகாரில், சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக ஏராளமானோரிடம் இருந்து 76 லட்சத்து 50  ஆயிரம் ரூபாயை வசூலித்தேன். அந்த பணத்தை சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது  கணவர் லோகராஜனிடம் வழங்கினேன். பணத்தை பெற்றுக்  கொண்டு பணி நியமனம் வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன்  கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லொகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 25 லட்ச ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட  வேண்டும். மறு உத்தரவு வரும்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்தார்.