districts

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம், ஜூலை 22-

    விழுப்புரம் மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் விவசாயிகள் சரமாரியாக குற்றம் சாட்டினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, நாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெயரளவில் எங்களுக்கு பதில் தபால் மட்டுமே வருகிறது.

    ஆனால் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இம் மாவட்டத்தில் சவுக்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், சவுக்கு நாற்று கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

   இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த ஆட்சியர், “விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.

    தாட்கோ மானியம் 2018 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

    விதை விற்பனையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.