சிதம்பரம், பிப். 24- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறையின் மூன்று மாணவர்கள் (பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது) தேசிய அளவிலான பொதுதிறன் சோதனை தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான அகமதாபாத் மற்றும் ஆனந்தில் உள்ள ஊரக மேலாண்மை மையங்களில் சேர்ந்து உயர்கல்வி பெறும் அழைப்பைப் பெற்றுள்ளனர். மேலும் வேளாண் மற்றும் தோட்டக்கலை இளநிலை பாடப்பிரிவுகளில் கடந்த 6ஆவது பருவ காலம் வரை மாணவிகள் செல்வநாயகி, அபிராமி ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். வேளாண் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திருமால் கண்ணன், வேளாண் விரிவாக்கத்துறை மற்றும் அவரது ஆராய்ச்சி வழிகாட்டி முனைவர் ராஜ் பிரவீன் ஆகியோர் இந்திய சமூக அறிவியல் கழக ஆய்வு ஊக்கத்தொகை 2020-2021 ஆண்டிற்கு ரூ.1,10,000 என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதையறிந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் அவரது அலுவலகத்துக்கு மாணவர்களை அழைத்து பாராட்டினார். இதில் வேளாண் புல முதல்வர் சுந்தர வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.