புதுச்சேரி,ஜூன் 23-
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட ஆண்டியார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பால் வியாபாரி பி.வடமலை. இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியிலுள்ள கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் 5 குட்டே பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
அதைப் பிரித்து சாப்பிட்ட போது பிஸ்கட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. மேலும், பிஸ்கட் சாப்பிட்டவருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், பிஸ்கட்டில் தலைமுடி இருந்தது குறித்து சம்பந்தப்பட்ட சில்லறை விற்பனை கடை மற்றும் பிஸ்கட் நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. இதையடுத்து, தனது வழக்கறிஞர் ஆர். சரவணன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலையில் புதுவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வடமலை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில், வழக்குத் தொடுத்த வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் தீர்ப்பளித்தார்