தருமபுரி டிச,12- தருமபுரி ஒன்றியம், குண்டல்பட்டி - செம்மாண்டகுப்பம் செல்லும் சாலையில், பால் ஏற்றிவந்த மினிடெம்போ, சனத்குமார் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . தருமபுரி ஒன்றியம் குண்டல்பட்டியில் இருந்து செம்மாண்டகுப்பம் வரை செல்லும் கிராம தார் சாலை உள்ளது. இதற்கிடையில் சனத்குமார் நதி செல்வதால் நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று இரவு தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சனத்குமார் நதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், விசைத்தறி இராசயன கழிவுநீரும் சனத்குமார் நதியில் கலந்ததால் சனத்குமார் நதியில் வெள்ளை நுரையின் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது. இதனால், குண்டல்பட்டி - செம்மாண்ட குப்பத்திற்க்கு செல்லும் சாலையின் குறுக்கே சனத்குமார் நதி கடந்து செல்லும் தரைப்பாலம் தண்ணீரால் மூழ்கியது.
இதனிடையே திங்களன்று காலை குண்டல்பட்டியில் இருந்து செம்மாண்டகுப்பம் சென்ற பால் ஏற்றும் மினிடேம்போ இந்த தரைப்பாலத்தை கடக்கும் போது நிலைதடுமாறி சனத்குமார் நதியில் கவிழ்ந்தது. மினி டெம்போவை ஓட்டி வந்த விஜயகுமார், வண்டியின் கண்ணாடியை உடைத்து சிறுகாயங்களுடன் தப்பித்தார். மேலும், இருவர் நதியில் விழுந்து உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்த குண்டல்பட்டி அதன் சுற்றுவட்டார மக்கள் கூடினர். சனத்குமார் நதியில் கழிவுநீர் மற்றும் விசைத்தறி ராசாயன கழிவுநீர் கலந்து வந்ததால் மழைநீர் வெள்ளை நிறத்துடன் நுரை பொங்கி தரைபாலத்தை மூழ்கடித்தது. இதனால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றியக்குழுவும் வலியுறுத்தியுள்ளது.