கோவை புறநகரில் பரவலாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்து வருவதால் கோடை வெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெப்பம் வாட்டி வருகிறது. இந்த நிலையில் கோவை புறநகர் பகுதியான அன்னூரில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பெய்ய தொடங்கி, கனமழை கொட்டித் தீர்த்ததால் கோடை வெப்பத்தில் தகிதகித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றனர். குறிப்பாக அன்னூர் , கெம்பநாயக்கன்பாளையம் , புகலூர் முடுக்கன் துறை குமரன் குன்று தாளத்துறை ஆகிய பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். காற்றுடன் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.