சேலம், டிச.26- பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் எஸ்ஆர்பி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. டிஆர்கே கிரிக்கெட் அகாடமி மற்றும் செந்தூர் கிரிக்கெட் அகாடமி சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் எஸ்ஆர்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 20 ஓவர்களில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 12 அணியினர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சென்னை எத்திராஜ் கல்லூரியும், சென்னை ஸ்பார்க் அணியும் மோதினர். முதலில் களமிறங்கிய சென்னை எத்திராஜ் கல்லூரி அணியினர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்பார்க் அணியினர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து 20 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை எத்திராஜ் கல்லூரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆர்டிஐ பிரிவின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய் லட்சுமணன் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.