ஏலகிரி, மே 14-ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உரிய பராமரிப்பின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 48 மீட்டர் உயரத்தில் 4 மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. 30 சதுரகிலோமீட்டரில் இருக்கும் ஏலகிரிக்கு 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.சென்னை, பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்ற னர். இந்நிலையில் ஏலகிரியில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உரிய பராமரிப்பின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.இயற்கைப் பூங்கா என பெயரை மட்டும் வைத்துவிட்டு அங்கு ரசிப்பதற்கு எதுவுமே இல்லை என்கின்றனர் சுற்றுலா பயணிகள், செயற்கை நீரூற்றில் தண்ணீர் வருவதில்லை என்றும், வரவேற்பு தண்ணீர் கோபுரம் பழுதடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.புங்கனூர் ஏரியில் போதிய நீரின்றிக் காணப்படுவதால் படகு சவாரி செய்யச் செல்பவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பொம்மைகளும் சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.விரைவில் கோடை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு பூங்கா உள்ளிட்ட சுற்றுலாவாசிகள் அதிகம் கூடும் இடங்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.