நீலகிரிகளின் சோலைகளில் 2,700க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களில், 160 வகையான பன்னம் மற்றும் பரணி தாவரத்தைச் சேர்ந்தவை. நீலகிரி சோலைகளில் எண்ணற்ற வகையான பூக்காத தாவரங்கள், பாசிகள், பூஞ்சை, ஆல்கா மற்றும் நில ஒட்டுயிரிகள் உள்ளன. வேறு எந்த மலை வாழிடத்திலும் இவ்வளவு கவர்ச்சிகரமான இனங்கள் இல்லை. இந்த மலைப்பகுதியில் வங்காளப் புலி, இந்திய யானை, இந்தியச் சிறுத்தை, புள்ளிமான், இந்தியக் காட்டெருது, கடமான், செந்நாய், பொன்னிறக் குள்ளநரி, காட்டுப்பன்றி, நீலகிரி வரையாடு, இந்திய புள்ளிச் சருகுமான், புல்வாய், ஆசிய மரநாய், வரிப்பட்டைக் கழுதைப்புலி, தேன் கரடி, நாற்கொம்பு மான், கரும்வெருகு, முள்ளம்பன்றி, இந்திய மலை அணில், தேன் வளைக்கரடி, இந்திய சாம்பல் கீரிப்பிள்ளை, இந்திய எறும்புண்ணி, வங்காள நரி, ஆற்று நீர்நாய், வண்ண வெளவால் போன்ற விலங்குகளும், இந்திய மலைப் பாம்பு, ராசநாகம், கட்டுவிரியன், இந்திய நாகம், மலபார் குழி விரியன், நீலகிரி கீல்பேக், ஓணான், எரிக்ஸ் விட்டேக்கரி, சதுப்புநில முதலை போன்ற ஊர்வன இனங்களும், சோலைமந்தி, நீலகிரி மந்தி, சாம்பல் மந்தி, குல்லாய் குரங்கு போன்றவைகளும், இந்திய மயில், நீலகிரி சிரிப்பான், நீலகிரி ஈப்பிடிப்பான், வெள்ளைக் கானாங்கோழி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, நீலப் பைங்கிளி, மலை இருவாட்சி, கருப்பு புறா, கருங்கழுத்துப் பாறு, கருந்தலை மாங்குயில், சாம்பல் தலை புல்புல், மலபார் சாம்பல் இருவாச்சி போன்ற பறவைகளும், கேழல்மூக்கன், அமைதிப் பள்ளத்தாக்கு தூரிகை தவளை, மலபார் சறுக்குத் தவளை, பெடோமிக்சலஸ் போன்ற நீர்நில வாழிகளும், இன்னும் அறியப்படாத பல விலங்கினங்களும் காணப்படுகின்றன.