இளம்பிள்ளை, ஏப்.1- அரசு பள்ளியில் உள்ள கழிப்பிடத்தை அடைத்து புதிய கட்டிடம் கட்டப்படுவதால், கழிவறைக்கு செல்ல முடி யாமல் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இ. மேட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1.ஆம் வகுப்பு முதல் - 8 ஆம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் மூன்று வருடங்களுக்கு மேலாக வகுப்பறையிலேயே சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையலறை இயங்கி வரு கின்றது. தற்பொழுது புதிய சமையலறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் போது பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறை உள்ளே செல்ல முடியாதபடி நுழைவாயினை மறித்து கட்டிட பணி நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.