கள்ளக்குறிச்சி, பிப். 10- வேளாண் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் வியாழனன்று (பிப். 9) நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகள் ஆண்ட்ராய்டு கைபேசி யின் மூலம் உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், வேளாண் இடுபொருட்கள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு விவரம், விதைகள் இருப்பு விவரம், வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம். வானிலை முன் அறிவிப்பு மற்றும் உதவி வேளாண் அலுவலக வருகை போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்”என்றார். பிறகு வேளாண் கருவிகள், தார்ப்பாய், பேட்டரி, மருந்து தெளிப்பான் மற்றும் தென்னங்கன்றுகளை விவசாயி களுக்கு வழங்கினார். தோட்டக்கலை மற்றும் மலைபயிர்த் துறை சார்பில் காய்கறி விதைகள், திசுவாழை வழங்கப்பட்டது.