அங்காடியில் அழுகிய நிலையில் 30 கிலோ மீன்கள்
கடலூர், மார்ச் 23 - ரசாயனம் கலந்த மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலூர் முதுநகர் மீன் விற்பனை அங்காடியில், மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், சார் ஆய்வாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் அறிவு வேந்தன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய நிலையில் இருந்த மீன்கள் மீது பினாயில் ஊற்றி அழித்தனர்.
அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம்
சிதம்பரம்,மார்ச். 23- அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்றத் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல்அலுவலர் பாலமுருகன் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கட்டிடம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்வதற்காக ரூ 1 கோடியே 10 லட்சம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பு, புதிய சீருடைகளை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ராஜேந்திரகுமார், ஆதிதிராவிட அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பரந்தாமன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் சுப்பு உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
கடலூர், மார்ச் 23- கடலூரில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப புதிய கிராமங்கள், உள்வட்டம், கோட்டம் மற்றும் மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் பூ பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.