court

img

தலைமையாசிரியர்களுக்கு ஏப்.30க்குள் இடமாறுதல் கலந்தாய்வு.... உயர்நீதிமன்றம் உத்தரவு....

மதுரை:
இராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பதவி உயர்வில் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டு சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் காலியிடம் இல்லாததால் கிடாத்திருக்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். 2020 ஆம் ஆண்டுக்கு நடக்கவேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு கொரோனா வைரஸ்தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். 

எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.  இதே போல்  தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி,  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரி யர்கள்  மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை  புதனன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்,தொடக்கப்பள்ளி,     உயர்நிலைப் பள்ளி,  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு , ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்; அதன் பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

;